தமிழ்நாடு

குமரியில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2022-07-04 05:24 GMT   |   Update On 2022-07-04 05:24 GMT
  • குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக இருந்து வருகிறது.
  • மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை கிராமங்களில் உள்ள மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடந்தன.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ஜூன் ஜூலை மாதங்களில் வழக்கமாக கடல் சீற்றமாக காணப்படும்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக இருந்து வருகிறது.நேற்று முன்தினம் ராஜக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக ஊருக்குள் கடல்நீர் புகுந்தது.

குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.தொடர்ந்து சீற்றம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிய தொடங்கியது.

இந்தநிலையில் குமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து இன்று குமரி மாவட்டத்தில் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இன்று 3-வது நாளாக அழிக்கால் பகுதியில் கடல் சீற்றமாகவே உள்ளது. ராட்சத அலைகள் 5 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. இதையடுத்து கடற்கரையொட்டி உள்ள வீடுகள் வரை அலைகள் வந்து சென்றன.

குளச்சல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். குளச்சல் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இரயுமன் துறை, இணையம், தூத்தூர் கடியப்பட்டினம், பூத்துறை பகுதிகளிலும் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலில் சூறைக்காற்றும் வீசி வருவதால் ஏற்கனவே கடலுக்கு சென்ற பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.

இதே போல சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி பள்ளம் உள்பட பல கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாகவே காணப்பட்டது.

இதனால் இந்த கட ற்கரை கிராமங்களைச் சேர்ந்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளம் மற்றும் கட்டுமரங்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கடற்கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இதனால் மீன் வரத்து அடியோடு நின்று போனது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை கிராமங்களில் உள்ள மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடந்தன.

Tags:    

Similar News