தமிழ்நாடு

அரியலூர் வெடி விபத்தில் 11 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

Published On 2023-10-10 04:05 GMT   |   Update On 2023-10-10 04:05 GMT
  • விபத்தின்போது பட்டாசுகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்தன.
  • காயமடைந்தவர்கள் தஞ்சாவூர், அரியலூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமானூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் யாழ் அன்ட் கோ என்ற பெயரில் நாட்டு வெடி தயாரிப்பு ஆலை நடத்தி வருகிறார்.

இந்த ஆலையை ராஜேந்திரனின் உறவினர் அருண்குமார் (வயது 35) என்பவர் நிர்வகித்து வருகிறார். ஆலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி நாட்டு வெடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்றது.

பட்டாசுகள் தயாரிப்பு பணியில் நேற்று காலை 2 பெண்கள் உள்பட சுமார் 40 பேர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஆலையில் தயாரித்து வைத்திருந்த வெடிகள் திடீரென வெடித்து நாலாபுறமும் சிதறின.

இதில் பெண்கள் உள்பட 11 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

இந்த விபத்தின்போது பட்டாசுகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்தன. காயமடைந்தவர்கள் தஞ்சாவூர், அரியலூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர்கள் சிவசங்கர், சி.வி.கணேசன், எம்.எல்.ஏ. கு.சின்னப்பா, அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

மேலும் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் அரசு சார்பில் தலா ரூ.50 ஆயிரம் உதவி த்தொகை வழங்கினர்.

இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆலை உரிமையாளர் ராஜேந்திரன், அவரது மருமகன் அருண்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News