தமிழ்நாடு

ஈரோட்டில் குடிசை வீடு, டெய்லர் கடையில் தீ விபத்து

Published On 2024-01-02 07:09 GMT   |   Update On 2024-01-02 07:09 GMT
  • 2 தீ விபத்தையும் சேர்த்து லட்சக்கணக்கில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு வீரப்பன்சத்திரம் சி.என்.கல்லூரி அருகே கோவிந்தராஜன் தோட்டத்தை சேர்ந்தவர் சேகர் (52). இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு திருமணமான 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சேகரும், அவரது மகனும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் இருந்த குமாரி இன்று காலை சுமார் 6 மணியளவில் காய்கறி வாங்க வெளியே சென்றிருந்தார். அவர் அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீட்டில் இருந்து கரும்புகை வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் வீட்டிற்குள் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் மேத்யூ (47). இவர் கிருஷ்ணம்பாளையம் சாலையில் மேத்யூ டிரஸ் மேக்கர்ஸ் என்ற பெயரில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் வேலை முடித்து விட்டு மேத்யூ கடையை பூட்டி விட்டு சென்றார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் மேத்யூவின் டெய்லர் கடையில் இருந்து புகை வெளி வந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த 3 தையல் மிஷின்கள், தைத்து வைக்கப்பட்டிருந்த துணிகள் மற்றும் தைக்காமல் வைத்திருந்த துணிகள் என பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 தீ விபத்தையும் சேர்த்து லட்சக்கணக்கில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

Tags:    

Similar News