தமிழ்நாடு

குடியாத்தம் அருகே மோர்தானா அணையில் மூழ்கி யானை பலி

Published On 2023-08-21 04:30 GMT   |   Update On 2023-08-21 04:30 GMT
  • மோர்தானா அணையின் கடைசி பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக மறுபக்கத்திற்கு செல்லும்.
  • யானையை கால்நடை மருத்துவர் கொண்டு மோர்தானா கரைப்பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

குடியாத்தம்:

வேலூர் மாவட்ட எல்லயைில் உள்ள ஆந்திர மாநில வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது.

இந்த சரணாலயத்தில் 40-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. பல குழுக்களாக பிரிந்து அடிக்கடி தமிழக பகுதிகளுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது. மோர்தானா அணையின் கடைசி பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக மறுபக்கத்திற்கு செல்லும்.

இந்நிலையில் நேற்று மாலை அணையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அணையின் கரை பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்து மிதந்து கொண்டிருந்தது.

இது குறித்து ஆடு மேய்ப்பவர்கள் வனத்துறைக்கும் வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

நேற்று இரவு வனத்துறையினர் யானை இறந்து கிடக்கும் பகுதிக்கு செல்ல முயன்றனர். ஆனால் அந்த பகுதியில் காட்டு யானைகள் ஆவேசமாக சுற்றி திரிந்தன.

தூரத்தில் யானை கூட்டம் இருப்பது தெரிந்ததால் வனத்துறையினர் திரும்பி வந்துவிட்டனர்.

குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா தலைமையில் வனத்துறையினர் இன்று காலையில் மீண்டும் சென்றனர். அப்போது காட்டு யானை கரை ஒதுங்கியது.

இதனைத் தொடர்ந்து இறந்த யானையை கால்நடை மருத்துவர் கொண்டு மோர்தானா கரைப்பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

யானை கரையை கடந்து செல்லும் போது சேற்றில் சிக்கி இறந்ததா? அல்லது ஏதாவது காயம் ஏற்பட்டு நீந்த முடியாமல் இறந்ததா? என பிரேத பரிசோதனைக்கு பின்பு தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News