தமிழ்நாடு

தருமபுரி அருகே பேரிகார்டு மீது மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து

Published On 2023-10-30 05:14 GMT   |   Update On 2023-10-30 05:14 GMT
  • விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
  • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி:

சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், லாரி பார்க்கிங் பகுதிக்கு அருகே தனியார் ஆம்னி பஸ் விபத்தால் 20 பேர் காயம் அடைந்தனர்.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 20 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் ஆம்னி பஸ் ஒன்று பெங்களூருவை நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை கேரளா மாநிலத்தைச் சேர்ந்த காசி (29) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை தருமபுரி பென்னாகரம் பிரிவு சாலையில் அந்த ஆம்னி பஸ் வந்தது. அப்போது அங்கு லாரி பார்க்கிங் அருகே வாகனங்கள் மெதுவாக கடந்து செல்வதற்காக சாலையி்ல் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு இருப்பதை கவனிக்காமல், வேகமாக வந்த ஆம்னி பஸ் மோதியது.

இதில் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து அதே இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். 13 பேர் லேசான காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து உடனே தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரின்ஸ், ஜோசப், சுஜாதா, கீதா, மாளவிகா, எடிசன், ஹான்சன், ஆகிய 7 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரைவர் உள்பட 13 பேர் லேசான காயங்களுடன் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News