தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்

Published On 2023-05-04 07:46 GMT   |   Update On 2023-05-04 07:46 GMT
  • பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததும் தவறானது.
  • இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தனர்.

சென்னை:

எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அ.தி.மு.க.வின் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் டெல்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அ.தி.மு.க. விவகாரம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளபோது "அ.தி.மு.க. பொதுக்குழு மூலம் திருத்தப்பட்ட கட்சியின் சட்ட விதிகள், மாற்றங்கள் தொடர்பான தீர்மானங்களையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது தவறு.

அதேபோல பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததும் தவறானது. எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புருஷேந்திரகுமார் கவுரவ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதி, ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி கோரிக்கை தொடர்பாக 6 வார காலத்திற்குள் பதில் அளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags:    

Similar News