தமிழ்நாடு செய்திகள்

கிருஷ்ணகிரி வெடி விபத்து நடந்த இடத்தில் இன்று கோவை மேற்கு மண்டல ஐ.ஜி நேரில் ஆய்வு

Published On 2023-08-02 13:26 IST   |   Update On 2023-08-02 13:26:00 IST
  • விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஐ.ஜி. விசாரணை நடத்தினார்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கடந்த 29-ந் தேதி பட்டாசு குடோனில் வெடிவிபத்து நடந்தது 9 பேர் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தருமபுரி மாவட்ட தடயவியல் துறை ஆய்வு செய்ததில் சிலிண்டர் வெடித்ததால்தான் இந்த விபத்து நடந்தது என்று அமைச்சர் கூறினார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வெடிவிபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கான காரணம் பட்டாசா? கியாஸ் சிலிண்டரா? என்பது குறித்து பாராளுமன்றத்திலும் விவாதம் நடந்ததால் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் இன்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் பழையபேட்டையில் சம்பவ நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

அப்போது சம்பவம் குறித்து தகவல்களை ஐ.ஜி. சுதாகர், மாவட்ட எஸ்.பி.யிடம் கேட்டறிந்தார். மேலும், பட்டாசு குடோன் வெடித்து பலியானவர்களின் உடல் சிதறி கிடந்த அனைத்து இடங்களையும், சுமார் 250 மீட்டர் தொலைவு வரை சுற்றி பார்வயைிட்டும் ஐ.ஜி. ஆய்வு செய்தார். மேலும், விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஐ.ஜி. விசாரணை நடத்தினார்.

இதேபோன்று சென்னையில் இருந்து தடயஅறிவியல் துறை இயக்குனர் விசாலாட்சி விஜயலட்சுமி, துணை இயக்குனர்கள் நளினி, சண்முகசுந்தரம் ஆகியோர் வெடிவிபத்து நடத்த கிருஷ்ணகிரிக்கு இன்று நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது அவர்கள் வெடிவிபத்து நடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதி முழுவதும் பார்வையிட்டு தொடர்ந்து 2 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News