துருக்கியில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தையை சென்னைக்கு அழைத்துவர ரூ.10 லட்சம் உதவி: முதலமைச்சர் உத்தரவு
- இஸ்தான்புல் மெடிக்கானா மருத்துவமனையில் குழந்தை சந்தியா அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இஸ்தான்புல் நகரிலிருந்து மருத்துவ வசதிகளுடன் குழந்தை சந்தியாவை தமிழ்நாடு அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கடந்த 7.9.2023 அன்று தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் என்பவர் தனது 2 வயது பெண் குழந்தையுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துக்கொண்டிருந்து போது நடுவானில் அவரது இரண்டு வயது பெண் குழந்தை சந்தியாவிற்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அவசரமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் விமானம் தரையிறக்கப்பட்டது.
அங்கு "இஸ்தான்புல் மெடிக்கானா மருத்துவமனை"-யில் குழந்தை சந்தியா அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவசர மற்றும் தீவிர சிகிச்சையின் பொருட்டு அவர்களின் மொத்த கையிருப்பு பணமும் செலவழிந்த நிலையில் மேல்சிகிச்சை செய்திட தமிழ்நாடு கொண்டு வர மருத்துவரிடம் ஆலோசனை பெறப்பட்ட நிலையில் குழந்தை சந்தியாவிற்கு கடுமையான சுவாச பிரச்சனை இருப்பதால், மருத்துவ குழுவின் கண்காணிப்பில், சுவாச கருவிகளுடன் விமானத்தில் பயணம் மேற்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இஸ்தான்புல் நகரிலிருந்து மேற்காணும் மருத்துவ வசதிகளுடன் குழந்தை சந்தியாவை தமிழ்நாடு அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
அக்கோரிக்கையினை தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்தியாவினை மேல்சிகிச்சைக்கு சென்னைக்கு அழைத்து வர ரூபாய் 10 லட்சம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
தற்போது அயலகத் தமிழர் நலத்துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சென்னை அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.