போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
- கவுந்தப்பாடி தென்காட்டுபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
- பவானி வட்டார கல்வி அலுவலர் கேசவன் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் ஆசிரியை மீது புகார் அளித்தார்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் பவானி கல்வி வட்டத்துக்கு உட்பட்ட கவுந்தப்பாடி தென்காட்டுபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
இங்கு கடந்த 17 ஆண்டுகளாக கவுந்தப்பாடி காந்திபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது மனைவி இயேசு மரியா ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1996 முதல் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணி செய்து வருகிறார்.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் தென்காட்டுபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர் 1992-ல் பட்டய படிப்பு படிக்கும்போது சான்றிதழை திருத்தி பணியில் சேர்ந்து உள்ளதாக தெரிகிறது.
இது குறித்து துறை ரீதியாக கடந்த 2020-ம் ஆண்டு சான்றிதழ் உண்மைத்தன்மை சரிபார்க்கும் பணி தொடங்கியது. இதில் பட்டய படிப்பு கல்வி சான்று போலியானது என கண்டறியப்பட்டது.
இது பற்றி பவானி வட்டார கல்வி அலுவலர் கேசவன் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் ஆசிரியை இயேசு மரியா மீது புகார் அளித்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி ஆசிரியை இயேசு மரியா மீது மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக கல்வி அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.