நாமக்கல் பகுதி பா.ஜ.க. கோட்டையாக உருவெடுத்துள்ளது- அண்ணாமலை பேச்சு
- தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கும் இல்லாத பெருமை நாமக்கல் மாவட்டத்திற்கு இருக்கிறது.
- நாமக்கல் மாவட்டத்தில் பா.ஜனதா கட்சி அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கும் இல்லாத பெருமை நாமக்கல் மாவட்டத்திற்கு இருக்கிறது. அதிகமான சிறு, குறு தொழிற்சாலைகள், தொழில் அதிபர்கள் இங்கு இருக்கின்றார்கள். இவர்கள் அனைவருமே 9 ஆண்டு காலமாக பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில் நேரடியாக பயன்பெற்றவர்கள்.
முத்ரா லோன், கடன் திட்டம், விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய ரூ.6 ஆயிரம் தொகை திட்டம் மற்றும் மத்திய அரசு சார்பில் வந்துள்ள திட்டங்களாக இருக்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் இந்த திட்டங்களில் சேர்ந்துள்ள பயனாளிகள் அதிகம்.
நாமக்கல் மாவட்டத்தில் பா.ஜனதா கட்சி அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. காரணம் நாம்முடைய பா.ஜ.கட்சியின் டேட்டா பேஸ். இதை நாங்கள் வாரம் வாரம் ஆய்வு செய்வோம். புதியதாக உறுப்பினர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். புதியதாக எத்தனை கிளை ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றெல்லாம் ஆய்வு செய்யப்படும். நாமக்கல் பகுதி வேகமாக வளர்ந்து வரக்கூடிய பா.ஜனதாவுடைய கோட்டையாக மாறிக்கொண்டு இருக்கிறது. இது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது பேசும்போது, இளைஞர்களாகிய நீங்கள் அடுத்த வெற்றிக்கு முன்னேறி செல்ல வேண்டும். உண்மையான விசுவாசியாக இருக்க வேண்டும். கடுமையான உழைப்பு வெற்றியைத் தரும். முழுமையான அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்.வெற்றி தோல்வி பற்றி கவலைப்படக் கூடாது.
இன்றைக்கு சமுதாயத்தில் வங்கி கணக்கில் அதிகமாக பணம் இருக்கக்கூடிய பணக்காரர்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினை ஒரு சாதாரண மனிதருக்கு இன்றைக்கு இல்லை. அவர்களுக்குத்தன் அதிக பிரச்சினை இருக்கிறது. பணத்தை எப்படி காப்பாற்றுவது, பணத்தை எப்படி பெருக்குவது, பணத்தை எப்படி அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது, என அவர்களுக்கு பல பிரச்சினை இருக்கிறது.
ஆனால், ஆக்கபூர்வமாக எதையும் எதிர்பார்க்காம சம்பாதிக்கிறவங்க தன்னை பணக்காரன் என்று சொல்வது கிடையாது. இவர்கள் தங்கள் வாழ்க்கையை பொறுத்தவரை எல்லா விஷயத்தையும் ஆழமாக பார்க்கிறாங்க. பணம் என்பது ஒரு பகுதி. மகிழ்ச்சி என்பது ஒரு பகுதி, ஆரோக்கியமான குடும்பம் என்பது ஒரு பகுதி, சமுதாயத்துக்கு அவர்களுடைய பங்களிப்பு ஒரு பகுதி, நாட்டினுடைய வளர்ச்சிக்கு அவர்களும் துணை இருப்பது ஒரு பகுதி. வாழ்க்கையினுடைய வெற்றி என்பது அனைத்தினுடைய கலவை என்று இவர்கள் பார்க்கின்றார்கள்.
சில மனிதர்கள் அதில் ஒன்றை மட்டும் பார்க்கிறார்கள். அதாவது பணத்தை மட்டும் குறிக்கோளாக நினைக்கிறார்கள். இதனால் வாழ்க்கை மாறி விடுகிறது. இதுபோன்ற வாழ்க்கை வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.