சென்னை ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் பதவி ஏற்றனர்
- புதிய நீதிபதிகளுடன் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து, காலியிடங்கள் 10ஆக குறைந்து உள்ளது.
- சென்னை பெரம்பூரில் பள்ளி படிப்பை முடித்த நீதிபதி செந்தில்குமார் சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் 1994-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்தார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நீதிபதிகள் என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் இரு புதிய நீதிபதிகளையும், அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் வரவேற்று பேசினார்.
அப்போது அவர், சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து தற்போது ஐகோர்ட்டு நீதிபதிகளாக பொறுப்பேற்றிருக்கும் இவர்கள் இருவரும் வக்கீல்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர் என்றார்.
இதே போல புதிய நீதிபதிகளை வரவேற்று பேசிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், மின்னணு முறை மனு தாக்கல் செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதியை கேட்டுக்கொண்டார்.
மேலும் சென்னை ஐகோர்ட்டு பல்வேறு வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாகிகள் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினர்.
ஏற்புரையாற்றிய இரு நீதிபதிகளும், தங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு பாரபட்சம் இல்லாமல் நீதி வழங்குவதாக தெரிவித்தனர்.
புதிய நீதிபதிகளுடன் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து, காலியிடங்கள் 10ஆக குறைந்து உள்ளது.
நீதிபதி என்.செந்தில் குமார், நாராயணசாமி-சங்கரவல்லி தம்பதியருக்கு மகனாக 1970ம் ஆண்டு அக்டோபர் 12-ந் தேதி பிறந்தார். தந்தை நாராயணசாமி ரெயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றியவர். தாய் சங்கரவல்லி, அச்சரப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 2006 முதல் 2011 வரை பதவி வகித்தவர்.
சென்னை பெரம்பூரில் பள்ளி படிப்பை முடித்த நீதிபதி செந்தில்குமார் சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் 1994-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் தற்போதைய அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரத்தின் ஜூனியர் ஆக பணியை தொடங்கினார்.
நீதிபதி அருள் முருகன் தர்மபுரியில் கணபதி-நீளாமணி தம்பதியருக்கு 1976-ம் ஆண்டு மே 27ந்தேதி பிறந்தார். அவரது தந்தை தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். சேலத்தில் பள்ளி படிப்பையும் சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்து 1999-ம் ஆண்டு முதல் மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமியின் ஜூனியர் ஆக பணியை தொடங்கினார்.