உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
- வடமேற்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி கடந்த வாரம் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்தது.
- வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் நீராதாரமாக உள்ளது.
நீர்வழித்தடங்களில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது அதில் தானாகவே கரைந்து விடுகிறது. இதனால் தண்ணீர் உடலின் மேல் விழும்போது உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
இந்தநிலையில் வடமேற்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி கடந்த வாரம் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.
தற்போது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சபரிமலை சீசன் என்பதால் ஐய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது.