தமிழ்நாடு
உக்கினியம் அரசு தொடக்கப்பள்ளி மைதானத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.

மோசமான வானிலை- கடம்பூர் வனப்பகுதியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரை இறங்கியது

Published On 2023-01-25 07:16 GMT   |   Update On 2023-01-25 07:16 GMT
  • ஹெலிகாப்டர் திடீரென தரை இறக்கப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து பார்த்தனர்.
  • வானிலை சீரடைந்ததும் 11 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.

சத்தியமங்கலம்:

வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் இன்று காலை புறப்பட்டார். ஹெலிகாப்டரில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், அவரது உதவியாளர்கள், பைலட்டுகள் உள்பட 6 பேர் பயணம் செய்தனர்.

ஹெலிகாப்டர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதியில் காலை 10.40 மணியளவில் வானில் சென்றது. அப்போது அந்த பகுதியில் கடுமையான மேக மூட்டம் காரணமாக வானிலை மோசமாக இருந்தது.

இதையடுத்து பைலட் அவசர அவசரமாக ஹெலிகாப்டரை தரை இறக்க முயன்றார். பின்னர் ஒரு வழியாக கடம்பூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள உக்கினியம் என்ற கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் திடீரென தரை இறக்கப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து பார்த்தனர். அப்போது தான் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது தெரியவந்தது.

பின்னர் வானிலை சீரடைந்ததும் 11 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.

இதே போல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு சென்ற ஹெலிகாப்டரும் மோசமான வானிலை காரணமாக கடம்பூர் மலைப்பகுதி அத்தியூர் என்ற பகுதியில் வயல்வெளியில் தரை இறங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News