தமிழ்நாடு

சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ஆன்லைனில் ரூ.8.29 லட்சம் மோசடி: வடமாநில கும்பல் கைவரிசை

Published On 2023-11-11 06:23 GMT   |   Update On 2023-11-11 06:23 GMT
  • மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.
  • சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்த 29 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது செல்போனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நீங்கள் மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.

அதற்கு அவர் நான் எந்த பார்சலும் அனுப்பவில்லை என தெரிவித்தார். மறுமுனையில் பேசியவர் நாங்கள் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி, உங்கள் பெயரில் தான் பார்சல் சென்றுள்ளது. அதனால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.27 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டினார்.

இதனால் பயந்து போன சாப்ட்வேர் என்ஜினீயர் 3 தவணைகளாக ரூ.8 லட்சத்து 29 ஆயிரத்து 348-ஐ அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ஆன்லைனில் அனுப்பினார். தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியது.

இதனால் சந்தேகம் அடைந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது உத்தரபிரதேசத்தை சேர்ந்த மோசடி கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News