தமிழ்நாடு

மாணவியை கர்ப்பிணியாக்கி கொன்று புதைத்த காதலன் கைது

Published On 2023-05-12 10:05 GMT   |   Update On 2023-05-12 10:05 GMT
  • உறவினர் வீட்டிற்கு வந்தபோது பிரிதர்ஷினிக்கும், அகிலனுக்கும் காதல் ஏற்பட்டது
  • பிரிதர்ஷினி தொடர்ந்து அகிலனுடன் பழகி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் 100 நாள் வேலையில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

அங்கிருந்த சுடுகாட்டின் அருகில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டபோது ஒரு இளம்பெண்ணின் உடல் கிடைத்தது. இது தொடர்பான புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா தலைமையிலான கஞ்சனூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டவர் விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கண்டமானடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி பிரியதர்ஷினி (வயது 17) என்பது தெரியவந்தது. விசாரணையில் பிரியதர்ஷினியை கொன்றது விக்கிரவாண்டியை அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் மகன் அகிலன் (23) என்பது தெரிய வந்தது.

அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அகிலனை கைது செய்தனர். இவர் பேண்ட் வாத்திய குழுவில் டிரம்ஸ் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் பிரியதர்ஷினியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு உடந்தையாக விக்கிரவாண்டியை அடுத்துள்ள கக்கனூர் கிராமம் கக்கன் வீதியில் வசிக்கும் ராஜாமணி மகன் சுரேஷ் குமார் (22) இருந்ததாக அகிலன் தெரிவித்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அகிலன் உறவினர் வீடு விழுப்புரத்தை அடுத்த கப்பூரில் உள்ளது. அதே போல பிரியதர்ஷினி உறவினர் வீடும் கப்பூரில் உள்ளது.

இருவரும் அவரவர் உறவினர் வீட்டிற்கு வந்தபோது பிரிதர்ஷினிக்கும், அகிலனுக்கும் காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அகிலன் அடிக்கடி கண்டமானடி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் பிரிதர்ஷினியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இத்தகவல் அறிந்த பிரியதர்ஷினியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனை பிரிதர்ஷினி கேட்காமல், தொடர்ந்து அகிலனுடன் பழகி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், தான் 3 மாத கர்ப்பிணியானதையும், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படியும் அகிலனிடம் பிரியதர்ஷினி வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து சித்தேரிப்பட்டுக்கு வா, திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரியதர்ஷினியை அழைத்து வந்து கொன்று இருப்பது தெரிய வந்தது.

Tags:    

Similar News