தமிழ்நாடு

தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான போலீஸ்காரர் சாமதுரைக்கு இடைக்கால ஜாமீன்

Published On 2022-06-06 09:00 GMT   |   Update On 2022-06-06 09:00 GMT
  • சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
  • போலீஸ்காரர் சாமதுரை தனது மகள் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்ள இடைகால ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு போலீஸ்நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த இரட்டைக்கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சாத்தான்குளத்தில் அப்போதைய இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரரர் சாமதுரை உள்ளிட்ட போலீசார் 9 பேர் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலீஸ்காரர் சாமதுரை தனது மகள் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்ள தனக்கு இன்று (6-ந் தேதி) முதல் வருகிற 7-ந் தேதி வரை இடைகால ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போலீஸ்காரர் சாமதுரை அவரது மகள் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொள்ள இன்று (6-ந் தேதி) மதியம் 1 மணிமுதல் நாளை (7-ந் தேதி) மாலை 4 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News