பழனியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பு
- திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் அதற்கு அனுமதி மறுத்து மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
- ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை போன்றே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கும் காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
பழனி:
தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் செப்டம்பர் 28-ந் தேதிக்குள் அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் திராவிடர் கழகம் சார்பில் அக்டோபர் 2-ந் தேதி சமூக நீதி பேரணி நடைபெறும் என்றும் தங்களுக்கு அக்டோபர் 2-ந் தேதி இந்த பேரணியை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அந்தந்த மாவட்ட எஸ்.பி. அலுவலகங்களில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் அதற்கு அனுமதி மறுத்து மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது. பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அக்டோபர் 2-ந் தேதி பொதுக்கூட்டம், போராட்டம், பேரணி என்ற எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை போன்றே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கும் காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.