தமிழ்நாடு

இரும்பு ராடால் அடித்து பிரபல ரவுடி கொலை: கைதான வாலிபர் சேலம் சிறையில் அடைப்பு

Published On 2023-10-15 08:40 GMT   |   Update On 2023-10-15 08:40 GMT
  • மேட்டூரில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு செல்வதற்காக காரை தரும்படி கிட்டா மணிகண்டனிடம் கேட்டார்.
  • கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.

சேலம்:

சேலம் கோரிமேடு ஜல்லிக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டா மணிகண்டன் (வயது 30), பிரபல ரவுடி. திருமணமாகாத இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மகாவிஷ்ணு (32). இவர் மேட்டூரில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு செல்வதற்காக காரை தரும்படி கிட்டா மணிகண்டனிடம் கேட்டார்.

அதற்கு அவர் கார் இப்போது தான் வாங்கியிருக்கிறேன், நானே ஓட்டி கொண்டு வருகிறேன் என்று கூறினார். இதனால் வேறு ஒரு காரில் மேட்டூர் சென்ற மகாவிஷ்ணு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது ரவுடி கிட்டா மணிகண்டன் என்னிடம் காரை கேட்டு விட்டு எதுவுமே சொல்லாமல் போய் விட்டாயே வண்டிக்கு டீசலை போட்டு கொண்டு காத்திருக்கிறேன் என கூறினார்.

முன்னதாக மகாவிஷ்ணுவின் அக்காவிடமும் இவ்வாறு கேட்டு அவர் தகராறு செய்தார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு அங்கிருந்த இரும்பு ராடால் ரவுடி கிட்டா மணிகண்டன் மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்ற மகாவிஷ்ணுவை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவுடி கிட்டா மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.

Tags:    

Similar News