தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட நகை-பணத்தை காணலாம் - கைதான சதீஷ் ரெட்டி

காஞ்சிபுரத்தில் 200 பவுன் நகை திருட்டு: 81-வது முறையாக பிடிபட்ட கொள்ளையன்

Published On 2024-03-27 10:08 GMT   |   Update On 2024-03-27 10:08 GMT
  • தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று சித்தூர் மாவட்டம் புத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளையனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
  • ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிச் சென்று உள்ளான்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் மகாவீர் சந்த். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டி இருந்த இவரது வீட்டின் பூட்டை உடைத்து 182 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளைபோனது. இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் வீட்டில் 15 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தபோது இந்த 2 கொள்ளையிலும் ஈடுபட்டது ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் சதீஷ் ரெட்டி என்பது தெரிந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று சித்தூர் மாவட்டம் புத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவன் மீது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே 80 வழக்குகள் இருப்பது தெரிந்தது. இப்போது 81-வது முறையாக கொள்ளை வழக்கில் சதீஷ் ரெட்டி பிடிபட்டு உள்ளார். பல கொள்ளை வழக்குகளில் அவர் பிடிபடாமல் சுற்றி வந்த நிலையில் காஞ்சிபுரம் கொள்ளை வழக்கில் பிடிபட்டு இருக்கிறான்.

அவனிடம் இருந்து 88 பவுன் நகை, ரூ.36 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிச் சென்று உள்ளான். ஒரே இடத்தில் கைவரிசை காட்டினால் சிக்கிக்கொள்வோம் என்பதால் இடத்தை அடிக்கடி மாற்றியதாகவும் கூறி உள்ளான்.

கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News