வடலூரில் தனியார் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்: 15 பேர் காயம்
- கடலூரில் இருந்து அதிகாலை 5.30 மணி அளவில் தனியார் பஸ் சுமார் 30 பயணிகளுடன் கிளம்பி விருத்தாச்சலம் வந்து கொண்டிருந்தது.
- பஸ் கண்டக்டர் உட்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் விருத்தாச்சலம் சாலையில் சபை பஸ் நிறுத்தம் அருகே தனியார் பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கடலூரில் இருந்து அதிகாலை 5.30 மணி அளவில் தனியார் பஸ் சுமார் 30 பயணிகளுடன் கிளம்பி விருத்தாச்சலம் வந்து கொண்டிருந்தது.
காலை 7.10 மணி அளவில் வடலூர் சபை பஸ் நிலையம் அருகே பஸ் வந்தபோது எதிர் திசையில் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் பகுதியிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை வடலூர் நோக்கி ஏற்றி வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பஸ் நேருக்கு நேர் மோதியதில் பஸ் மற்றும் லாரியின் முன்பக்கம் கண்ணாடிகள் உடைந்து முழுவதும் சேதமானது.
இதில் பஸ் கண்டக்டர் உட்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் பஸ்சும், சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.