தமிழ்நாடு

பூண்டி கால்வாய் சீரமைப்பு பணி முடியாததால் மழை நீரை சேமிப்பதில் சிக்கல்

Published On 2022-10-07 07:08 GMT   |   Update On 2022-10-07 07:08 GMT
  • சேதமடைந்த கிணறு மதகு அகற்றப்பட்டு புதிதாக 3 கிணறு மதகுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  • பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதும் ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது.

ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியின் அருகே நீரியல் ஆய்வுகூடம் உள்ளது. பூண்டி ஏரியில் தேங்கும் தண்ணீர் அங்குள்ள கிணறு மதகு வழியாக நீரியல் ஆய்வு கூடத்துக்கு செல்வது வழக்கம்.

கடந்த ஆண்டு பெய்த கனமழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. அப்போது தண்ணீரின் அழுத்தத்தால் ஏரியின் அருகே உள்ள மதகு சேதமடைந்து நீரியல் ஆய்வுக்கூ டத்துக்குள் வெள்ளம் பாய்ந்தது.

இந்த நிலையில் சேதமடைந்த கிணறு மதகு அகற்றப்பட்டு புதிதாக 3 கிணறு மதகுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரிவரை உள்ள கால்வாயிலும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரைகள் சீரமைக்கப்படுகின்றன.

இதற்காக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதும் ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. தற்போது பூண்டி ஏரியில் 609 மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதற்கிடையே பூண்டி கால்வாய் சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை.

தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளதால் கால்வாய் வழியாக வரும் மழை நீரை பூண்டி ஏரியில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கால்வாயில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே பருவமழை தீவிரம் அடைவதற்குள் கால்வாய் சீரமைப்பு பணிகளை முழுவதும் முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News