தமிழ்நாடு

பாரிவாக்கத்தில் மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்ததால் மக்கள் அதிர்ச்சி

Published On 2022-11-25 03:11 GMT   |   Update On 2022-11-25 03:11 GMT
  • தற்போது ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.92 ஆயிரம் வரை மின்கட்டணம் வந்திருப்பதால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
  • பூட்டியிருக்கும் வீட்டிற்கும் ரூ.92 ஆயிரம் மின் கட்டணம் வந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

பூந்தமல்லி:

பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் பகுதியில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாரிவாக்கம், பாணவேடு தோட்டம், பொன் நகர், கோளப்பன்சேரி, அணைக்கட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மின்சார கட்டணத்தை செலுத்துவது வழக்கம். இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்துவதற்காக பாரிவாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்தபோது ஒவ்வொருவருக்கும் வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு அதிகரித்து ரூ.20 ஆயிரம் முதல் ரூ.92 ஆயிரம் வரை மின் கட்டணமாக வந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் தங்களுக்கு எப்பொழுதும் மின்சார கட்டணம் ரூ.300 முதல் ரூ.500 வரை மட்டுமே வரும் என்றும் தற்போது ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.92 ஆயிரம் வரை மின்கட்டணம் வந்திருப்பதால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின் கணக்கீடு செய்ய ஒப்பந்த ஊழியர்களை வைத்து ஒவ்வொரு வீட்டிற்கும் மின் கணக்கீடு எடுக்கப்பட்டதாகவும் அதில் சில குளறுபடிகள் நடந்ததால் தற்போது இது போன்று அதிக மின் கட்டணம் வந்திருப்பதாக தெரிவித்தனர். தற்போது இதனை கண்டறிந்து ஒப்பந்த ஊழியர்களை நீக்கி விட்டு அரசு ஊழியர்களை மின் அளவீடு எடுப்பதற்கு பணியில் அமர்த்தி உள்ளதால் இந்த குறைபாடுகள் எல்லாம் தற்போது சரி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த குறைபாடு முலுவதுமாக சரி செய்யப்படும் என தெரிவித்தனர்.

குறிப்பாக பூட்டியிருக்கும் வீட்டிற்கும் ரூ.92 ஆயிரம் மின் கட்டணம் வந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News