கோவில் விளை நிலங்களுக்கான குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
- நிலங்களை பறிக்கும் செயலில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டிருக்கிறது.
- கோவில் நில குத்தகை உழவர்களை மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து காக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான நன்செய் நிலங்களில் விவசாயம் செய்து வரும் உழவர்கள், சில ஆண்டுகளாக குத்தகை நெல்லை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதைக் காரணம் காட்டி, அந்த நிலங்களை பறிக்கும் செயலில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டிருக்கிறது.
உழவர்களின் சூழலைப் புரிந்து அவர்களுக்கு உதவாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பது கண்டிக்கத்தக்கது. கோவில் நில குத்தகை உழவர்களின் வாழ்வாதாரத்தையும், நலனையும் கருத்தில் கொண்டு குத்தகை நெல் பாக்கி தொடர்பான வழக்குகளில் இருந்து விடுவிக்கவும், குவிந்து கிடக்கும் குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன் மூலம் கோவில் நில குத்தகை உழவர்களை மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.