ஈராக்கில் உயிரிழந்த நத்தம் தொழிலாளி: உடல் 38 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது
- இந்திய தூதரக முயற்சியால் சின்னையாவின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.
- வேலைதேடி வெளிநாடு சென்ற தொழிலாளி சடலமாக ஊர் திரும்பியது கிராம மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மூங்கில்பட்டியை சேர்ந்தவர் சின்னையா(45). கூலித்தொழிலாளி. இவருக்கு கோகிலா என்ற மனைவியும், மாரிச்செல்வம்(14), கவிவர்மன்(11), பிரநிஷா(5) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் கம்பி கட்டும் வேலைக்காக ஈராக் சென்றார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி சின்னையா தற்கொலை செய்து கொண்டதாக மனைவி கோகிலாவுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவர் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என நத்தம் தாசில்தார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பூங்கொடி உறுதி அளித்தார். இந்நிலையில் தன்னைபற்றி சிலர் அவதூறு பரப்பியதால் தற்கொலை செய்து கொண்ட வாட்ஸ்அப் மூலம் சின்னையா தகவல் அனுப்பியுள்ளார். இந்திய தூதரக முயற்சியால் சின்னையாவின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் சொந்தஊருக்கு வந்தது.
சின்னையாவின் உடலை பார்த்து மனைவி கோகிலா மற்றும் குழந்தைகள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வேலைதேடி வெளிநாடு சென்ற தொழிலாளி சடலமாக ஊர் திரும்பியது கிராம மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.