பாலாற்று மேம்பாலத்தில் விபத்து: மோட்டார் சைக்கிள்கள் மோதி வாலிபர் உள்பட 2 பேர் பலி
- விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாலாற்று மேம்பாலத்தில் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை, பள்ளத்தெரு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது27). ஏ.சி.மெக்கானிக். இவர் நேற்று இரவு காஞ்சிபுரத்தில் வேலையை முடித்துவிட்டு குருவிமலையில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். இரவு 11 மணியளவில் ஓரிக்கை, பாலாற்று மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே தேனம்பாக்கம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த எலெக்ட்ரீசியன்கள் ஆனந்தன் (50) மற்றும் தாமரை குளம் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (17) எதிரே ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
திடீரென மூர்த்தி மற்றும் ஆனந்தன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் மூர்த்தி மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஆம்புலன்சு மூலம் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தியும் இறந்து போனார். சதீசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலாற்று மேம்பாலத்தில் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓரிக்கை பாலாற்று மேம்பாலத்தில் வாகனங்கள் அனைத்தும் கட்டுப்பாடின்றி அதிவேகமாக செல்வதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே மேம்பாலத்தில் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.