தமிழ்நாடு

சேலம் மாநாடு வரும் தேர்தலுக்கான வெற்றி மாநாடு- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-01-21 12:29 GMT   |   Update On 2024-01-21 12:43 GMT
  • இளைஞரணியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் இருப்பார்.
  • பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.

சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாநாட்டிற்கு உழைத்த அமைச்சர் நேருக்கு நன்றி. 22 தலைப்புகளில் உரையாற்றிய அனைவருக்கும் நன்றி. திமுக இளைஞரணியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி.

திமுக இளைஞரணி மாநில மாநாடு 100 சதவீத வெற்றி பெற்றுள்ளது. இந்நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.

சேலம் மாநாடு வரும் தேர்தலுக்கான வெற்றி மாநாடு. பல அணிகள் இருந்தாலும் முதன்மையான அணி இளைஞரணி.

உழைப்பின் அடிப்படையில் நிர்வாகிகளை நியமனம் செய்தோம். மாவட்ட வாரியாக சென்று இளைஞரணியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினோம். 

இளைஞரணியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் இருப்பார். பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.

நீட் மிகப் பெரிய உயிர் கொல்லி நோயாக மாறியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 85 லட்சம் பேரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியின் துணையுடன் தான் மத்திய அரசு நம் உரிமைகளை பறித்தது.

நம்மிடம் அதிகம் வரியை பெற்றுக்கொண்டு மத்திய அரசு குறைந்த தொகையை தருகிறது. நாம் கேட்ட வெள்ள நிவாரண நிதி மத்திய அரசு வழங்கவில்லை.

நான் பேசியதற்கு மட்டும் மத்திய நிதியமைச்சர் பாடம் எடுத்தார். மரியாதை கொடுத்து நாம் கேட்ட நிதியை அவர்கள் தரவில்லை.

தமிழை காக்க உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளோம். தமிழர்களின் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள், அழிந்து போவார்கள்.

நாங்கள் எந்த சோதனைக்கும் பயப்பட மாட்டோம். பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு பயப்படும் இயக்கம் திமுக அல்ல.

திமுக, தொண்டர்களை கைவிட்ட வரலாறு கிடையாது. இந்த இயக்கத்தை நாம் பாதுகாத்தால் தான் சமூக நீதியை பாதுகாக்க முடியும்.

இந்திய கூட்டணி கைக்காட்டுபவரே அடுத்த பிரதமர். இந்திய கூட்டணி வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

திமுகவின் தேர்தல் வெற்றியை தமிழக வெற்றியாக மக்கள் கொண்டாடுகின்றனர். முதலமைச்சரின் கனவை நிறைவேற்றி தருவது தான் எங்கள் வேலை.

திமுக இளைஞரணி மாநாட்டை நாடே உற்று நோக்குகிறது. இது இளைஞர் அணி அல்ல, கலைஞர் அணி.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News