தமிழ்நாடு செய்திகள்

'பொதுமக்கள் தரும் மனுக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுங்கள்'- உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு வேண்டுகோள்

Published On 2023-09-01 13:23 IST   |   Update On 2023-09-01 13:24:00 IST
  • பல்வேறு துறைகள் சார்பாக 912 பயனாளிகளுக்கு ரூ.35.83 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
  • மக்கள் தங்கள் கோரிக்கைகளை குறைகளை மனுக்கள் மூலமாகத் தான் தெரிவிப்பார்கள்.

சென்னை:

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

அப்போது பல்வேறு துறைகள் சார்பாக 912 பயனாளிகளுக்கு ரூ.35.83 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

முதல்வரின் முகவரியில் தரப்படும் மனுக்களுக்கு தரமான பதில்கள் தருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. மக்கள் தங்கள் கோரிக்கைகளை குறைகளை மனுக்கள் மூலமாகத் தான் தெரிவிப்பார்கள். இந்த மனுக்களின் மீது குறித்த காலத்திற்குள் பதில் அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மனுக்களுக்கு பதில் தந்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தில் இல்லாமல் உங்கள் துறைக்கானது அல்ல என்று தெரிந்தாலும் அந்த நபருக்கு வேறு ஏதேனும் வகையிலாவது உதவலாம் என்று மனிதாபிமானத்தின் அடிப்படையில் மனுதாரருக்கு உதவுங்கள்.

குறிப்பாக ஏழை எளிய மக்கள், மாற்றுத் திறனாளிகள் பெண்கள் ஆகியோர் தரும் மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை செயலாளர் தாரேஷ் அகமது, மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், ஜெகத் ரட்சகன் எம்.பி., முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர், போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சந்திரன், சுதர்சனம், டி.ஜெ.கோவிந்தராஜன், கணபதி, துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அதிகாரி ராஜ் குமார், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, ஆவடி மாநக ராட்சி ஆணையர் தர்பக ராஜ், பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராம நாதன், துணை கமிஷனர் ஜெயலட்சுமி இளங்கோ கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News