முத்துப்பேட்டையில் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலா?- போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
- முத்துப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சிறப்பு வாகன ரோந்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் சி விஜில் 2022 ஆப்ரேஷன் ஒத்திகை இன்று காலை தொடங்கியது.
அதன்படி முத்துப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் இடும்பாவனம், தில்லைவிளாகம், கோபாலசமுத்திரம், தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள போலீஸ் செக்போஸ்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சிறப்பு வாகன ரோந்தில் ஈடுபட்டனர். இதனை திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.
முன்னதாக முத்துப்பேட்டை கடலை ஒட்டி அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய காடான அலையாத்திக்காடு மற்றும் லகூன் கடல் பகுதியில் முத்துப்பேட்டை கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கடலோர காவல்படை போலீசார் படகில் சென்று மீனவர்கள் படகு சுற்றுலா பயணிகள் செல்லும் படகுகள் மற்றும் படகுதுறை, அதேபோல் காட்டில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் பகுதியில் பயங்கரவாதிகள் சமூக விரோதிகள் யாரும் இருகிறார்களா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த 'சி விஜில் 2022 ஆப்ரேஷன்' ஒத்திகையில் திருவாரூர்,திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார், கடலோர காவல்படை போலீசார் மற்றும் சிறப்பு போலீசார், மற்றும் ஊர்க்காவல் படை போலீசார் இந்த ஒத்திகையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.