நீர்வரத்து 153 கனஅடியாக குறைந்தது- மேட்டூர் அணை நீர்மட்டம் 11 நாட்களில் 7 அடி சரிவு
- நேற்று 96.24 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 95.53 அடியாக சரிந்துள்ளது.
- டெல்டா விவசாயிகள் மழையை எதிர்நோக்கி உள்ளனர்.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 14-வது நாளாக இன்று நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 223 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 153 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம்கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 96.24 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 95.53 அடியாக சரிந்துள்ளது. கடந்த 11 நாட்களில் நீர்மட்டம் 7.11 அடி சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே, சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து முழுமையாக தண்ணீர் கிடைக்கும் என்பதால் டெல்டா விவசாயிகள் மழையை எதிர்நோக்கி உள்ளனர்.