தமிழ்நாடு செய்திகள்

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்த்தியது செல்லும்- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-12-27 15:48 IST   |   Update On 2022-12-27 15:48:00 IST
  • நாட்டின் பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப்படி சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்ததில் எந்த தவறும் இல்லை.
  • கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி இப்போது உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30-ந்தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30-தேதி சென்னை மாநகராட்சி, சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த அரசாணையையும், மாநகராட்சி தீர்மானத்தையும் எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, "மக்கள் நலத்திட்டங்களுக்கு தேவையான நிதியையும், அரசின் செலவினங்களுக்காகவும் வருவாயை திரட்டுவதும், வரி விதிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் சமன்படுத்துவதும் ஒரு மக்கள் நல அரசுக்கு அவசியமாகிறது என்பதால் வரி விதிப்பை வெளிப்படைத் தன்மையுடனும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டும் மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப்படி சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்ததில் எந்த தவறும் இல்லை. சொத்து வரியை உயர்த்துவது குறித்த அரசாணை என்பது ஆலோசனையாக உள்ளதே தவிர, உத்தரவாக இல்லை.

இந்த அரசாணையின் அடிப்படையில், கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி இப்போது உயர்த்தப்பட்டுள்ளது.

சொத்து வரி அரசாணையும், மாநகராட்சி தீர்மானங்களும் செல்லும். அதேசமயம், சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை சொத்துவரி செலுத்தும் 15 லட்சம் பேரில், 30 பேர் தெரிவித்த ஆட்சேபங்களை முறையாக பரிசீலித்து பதிலளித்திருந்தால் இந்த வழக்குகள் ஐகோர்ட்டுக்கு வந்திருக்காது. அதேபோல வரி உயர்வுக்கு பொதுமக்கள்  ஆட்சேபங்கள் தெரிவிக்கும் விதமாக முறையாக அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

மேலும், சொத்து வரியை நிர்ணயிக்க பின்பற்றப்படும் நடைமுறையை குறை கூற முடியாது. 2022-23ம் ஆண்டுக்கான இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தக் கூறி மனுதாரர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்யக்கூடும். 2023-24ம் ஆண்டின் முதல் அரையாண்டு முதல், அதாவது வரும் ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த வேண்டும். 

சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சிகள், தங்கள் இணையதளங்களை மேம்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News