தமிழ்நாடு செய்திகள்

ஜாபர் சாதிக்குக்கு எதிராக போலீசார் லுக் அவுட் நோட்டீஸ்

Published On 2024-03-02 09:03 IST   |   Update On 2024-03-02 09:03:00 IST
  • போதைப்பொருள் கடத்தல் கும்பல் மேற்கு டெல்லியில் உள்ள கைலாஷ் நகரில் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஜாபர் சாதிக் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

சென்னை:

போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகவே டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மேற்கு டெல்லியில் உள்ள கைலாஷ் நகரில் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த குடோனில் அதிரடியாக புகுந்து, அங்கிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ அளவில் போதையூட்டும் வேதிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என விசாரணையில் தெரியவந்தது.

இந்தநிலையில் ஜாபர் சாதிக் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் சம்மனை, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிலும், புரசைவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் போலீசார் ஒட்டியுள்ளனர். அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் ஜாபர் சாதிக்குக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதன்மூலம், இனி எந்த விமான நிலையத்துக்கு ஜாபர் சாதிக் சென்றாலும் உடனடியாக அவர் அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவார்.

Tags:    

Similar News