தமிழ்நாடு
குன்னூர் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு- மலை ரெயில் சேவை தாமதம்
- நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- மண் சரிவு காரணமாக ரெயில் தாமதமாக குன்னூருக்கு இயக்கப்பட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குன்னூர் பகுதியில் இரவு நேரத்தில் கனமழை பெய்கிறது. மழையும், பனி மூட்டமும் உள்ளதால் கடும் குளிர் காணப்படுகிறது.
நேற்று இரவு பெய்த மழையால் குன்னூர் அருகே ஹில்குரோவ் பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. மண்ணும், பாறைகளும் விழுந்ததால் தண்டவாளம் சிறிது சேதம் அடைந்தது.
உடனடியாக ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தண்டவாளமும் சீரமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் சேவை தொடங்கியது. மண் சரிவு காரணமாக ரெயில் தாமதமாக குன்னூருக்கு இயக்கப்பட்டது.