தமிழ்நாடு

கொலையுண்ட கோபால்.

ஏரியில் மீன் பிடித்ததால் தொழிலாளி கொலை: குத்தகைதாரர் உள்பட 2 பேர் கைது

Published On 2023-11-16 06:15 GMT   |   Update On 2023-11-16 06:15 GMT
  • சம்பவ இடத்துக்கு ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
  • காவலாளி மூலம் தகவல் அறிந்த சதீஷ் ஆத்திரமடைந்து மதுபோதையில் கோபாலை தாக்கியுள்ளார்.

ஓசூர்:

ஓசூர் அருகே சூளகிரி-பேரிகை சாலையில் கெஞ்சவுன் ஏரி அருகே தொழிலாளியின் பிணமாக கிடந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பேரிகை போலீசார் 2 பேர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஆருப்பள்ளியை சேர்ந்தவர் கோபால் (45). கூலித்தொழிலாளி.இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சூளகிரி - பேரிகை சாலையில், கடத்தூர் பக்கமுள்ள கெஞ்சகவுன் ஏரி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் கோபாலின் உடல் கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்த பேரிகை போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

போலீஸ் விசாரணையில், சூளகிரி அருகே ஏனுசோனை கிராமத்தை சேர்ந்த சதீஷ்(35) என்பவர், கெஞ்சகவுன் ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்திருந்த நிலையில் கோபால் அங்கு வலை போட்டு மீன்களை பிடித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து காவலாளி மூலம் தகவல் அறிந்த சதீஷ் ஆத்திரமடைந்து மதுபோதையில் கோபாலை தாக்கியுள்ளார்.

மேலும், கோபாலின் கழுத்தை நெறித்து கொன்று, அவர் அணிந்திருந்த லுங்கியால் மரத்தில் கட்டி தொங்கவிட்டதாக சதீஷ் போலீசாரிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து சதீசை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவி புரிந்ததாக ஏரி காவலாளி சந்திரப்பா (55) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News