தமிழ்நாடு செய்திகள்

இரட்டை வாக்குரிமையை பயன்படுத்தி மகளிர் உரிமைத்தொகைக்காக தமிழகம் வரும் கேரள தொழிலாளர்கள்

Published On 2023-07-31 10:00 IST   |   Update On 2023-07-31 10:00:00 IST
  • சிலர் கேரளாவிலும் குடியுரிமை பெற்று அந்த மாநில நலத்திட்டங்களிலும் பயன் அடைந்து வருகின்றனர்.
  • தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் கேரள எல்லை அருகே அமைந்துள்ளது. இங்கிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய், தேயிலை தோட்டத்துக்கு ஏராளமான தமிழக தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

சின்னமனூர், கம்பம், அய்யம்பட்டி, தர்மத்துப்பட்டி, பல்லவராயன்பட்டி, பண்ணைப்புரம், தேவாரம், போடி, குரங்கணி, கொட்டக்குடி, முந்தல் பகுதியில் இருந்து ஜீப் மூலம் ஏலக்காய் தோட்டத்துக்கு தினசரி தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். மேலும் நிரந்தர தொழிலாளர்கள் கேரளாவில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள நிரந்தர முகவரியை வைத்து ரேசன் பொருட்கள் மற்றும் கல்வி, வருவாய்த்துறை திட்டங்களில் பயன் அடைந்து வருகின்றனர். சிலர் கேரளாவிலும் குடியுரிமை பெற்று அந்த மாநில நலத்திட்டங்களிலும் பயன் அடைந்து வருகின்றனர்.

எனவே இருமாவட்ட நிர்வாகமும் இரட்டை குடியுரிமையை ரத்து செய்து ஏதாவது ஒரு இடத்தில் வாக்களிக்க முகாம்கள் நடத்தி வருகின்றனர். தற்போது தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

2 கட்டமாக பல்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. எனவே கேரள தோட்ட தொழிலாளர்கள் விடுப்பு எடுத்து தமிழகம் வருகின்றனர். அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பத்தை பெற்று ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

மேலும் திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தேனிக்கு வருகின்றனர். இந்த திட்டம் கீழ்தட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சொந்த ஊர்திரும்பி முகாம்களில் விண்ணப்பித்து வருகின்றனர். அதிகாரிகள் இதில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News