தலை ஆடிக்கு வந்த புதுமாப்பிள்ளையிடம் கத்திமுனையில் நகை பறிப்பு
- டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த நாகஜோதி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
- தனது மனைவியை வீட்டில் விட்டு விட்டு சின்னத்துரை திருப்பூர் செல்வதற்காக மூன்றாந்தல் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது32). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த நாகஜோதி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருப்பூரில் தங்கி இருந்த தம்பதியினர் தலை ஆடிக்காக பெரியகுளம் வந்தனர்.
பின்னர் தனது மனைவியை வீட்டில் விட்டு விட்டு சின்னத்துரை திருப்பூர் செல்வதற்காக மூன்றாந்தல் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் தாமரைக்குளம் பிரிவு அருகே வழிமறித்து சின்னத்துரையை பைக்கில் ஏறுமாறு கூறினர்.
அதற்கு அவர் மறுக்கவே கத்தியை காட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.