தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை 3-வது நாளாக அதிரடி வேட்டை

Published On 2024-04-07 13:34 IST   |   Update On 2024-04-07 13:34:00 IST
  • அரசியல் பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை இடைவிடாமல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
  • வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக சோதனையை தொடர்ந்து வருகிறார்கள்.

சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையில் அடையாறு இந்திரா நகர், திருவான்மியூர், அபிராமபுரம் ஆகிய 3 இடங்களிலும் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினார்கள். இதே போன்று தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை இன்று 3-வது நாளாக நீடிக்கிறது. அரசியல் பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை இடைவிடாமல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் கோடிக்கணக்கான பணம் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்கிற தகவலின் பேரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

நேற்று இரவோடு சோதனை முடிவடைந்து விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாகவும் சோதனையை தொடர்ந்து வருகிறார்கள். இந்த சோதனையின்போது கட்டுக்கட்டாக பணம் பிடிபட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மாலையில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் வருமான வரித்துறையினர் 3 நாட்களாக நடத்திய சோதனையில் எத்தனை கோடி பணம் பிடிபட்டுள்ளது என்பது பற்றிய முழுமையான தகவல்கள் தெரிய வரும்.

இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் 3 நாள் சோதனையில் எத்தனை கோடி பணத்தை கைப்பற்றியுள்ளனர் என்பது தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News