தமிழ்நாடு

இஸ்ரோ தலைவர் சோம்நாத் (கோப்பு படம்)

கன்னியாகுமரி அருகே விண்வெளி பூங்கா: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

Published On 2022-12-09 23:15 GMT   |   Update On 2022-12-09 23:25 GMT
  • தமிழக அரசு 12 ஏக்கர் இடத்தை விண்வெளி ஆய்வு மையத்திடம் வழங்கியுள்ளது.
  • மனிதர்கள் போன்ற பொம்மைகளை விண்வெளிக்கு அனுப்பி சோதனை.

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றி வருகின்றன. அதில் ஒருபகுதியாக விண்வெளி குறித்து அறியப்படாத பல தகவல்களை சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கன்னியாகுமரியில் ஸ்பேஸ் சயன்ஸ் அன்டு டெக்னாலஜி பார்க் என்ற விண்வெளி ஆராய்ச்சி பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ளது.

கன்னியாகுமரி கோவளம் கடற்கரை சாலையில் சன்செட் பாயிண்ட் அருகே அதற்கான இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்வெளி பூங்கா அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இஸ்ரோ உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத் கூறியுள்ளதாவது: கன்னியாகுமரியில் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக தமிழக அரசு 12 ஏக்கர் இடத்தை விண்வெளி ஆய்வு மையத்திடம் வழங்கியுள்ளது. விண்வெளி பூங்கா அமைப்பதற்கான பணி விரைவில் தொடங்கும். விண்வெளி பயணம் மேற்கொள்வதற்காக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சோதனை அடிப்படையில் மனிதர்கள் போன்ற பொம்மைகளை தயார் செய்து விண்வெளிக்கு அனுப்பப்படும். அதன்பிறகு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News