தமிழ்நாடு

மனைவியின் கள்ளக்காதலனை கொன்று புதைத்த வாலிபர் உறவினருடன் கைது

Published On 2023-03-28 08:03 GMT   |   Update On 2023-03-28 08:03 GMT
  • மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் சக்திவேலுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் 2 பேரையும் கண்டித்துள்ளார்.
  • சக்திவேல், ராஜபிரபு, முருகன் ஆகிய 3 பேரும் சரவண மருதுவை கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர்.

மதுரை:

மதுரை ஜெய்ஹிந்துபுரம் மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகன் சரவண மருது(வயது32). இவர் கடந்த 14-ந்தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டுச்சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதட்டமடைந்த ராஜேஸ்வரி, தனது மகனை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. ஆகவே மகன் சரவணமருது மாயமானது குறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சரவண மருதுவுக்கும், சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணின் கணவர் சக்திவேல்(36) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து சக்திவேலிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவர் சரவணமருதுவை கொன்று புதைத்ததாக தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான தகவல்கள் வருமாறு:-

சரவணமருது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டாங்கிப்பட்டிக்கு ஒரு வேலைக்காக சென்றுள்ளார். அப்போது சக்திவேல் மனைவிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் சக்திவேலுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் 2 பேரையும் கண்டித்துள்ளார். ஆனால் அவர்களின் கள்ளக்காதல் நீடித்தது. இதனால் சக்திவேல், சரவண மருதுவை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதற்காக மதுரை அருகே உள்ள தனது உறவினர்களான திருவாதவூர் சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜபிரபு(31), முருகன்(56) ஆகியோரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். அவர்கள் 3 பேரும் சேர்ந்து திட்டம் போட்டு சரவணமருதுவை திருவாதவூருக்கு வரவழைத்து கொலை செய்ய முடிவு செய்தனர்.

தனது போனில் இருந்து அழைத்தால் அதனை சரவண மருது ஏற்கமாட்டார் என்பதால், மனைவிக்கு தெரியாமல் அவரது செல்போன் மூலம் சரவணமருதுவுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில், "நீ திருவாதவூருக்கு புறப்பட்டு வா. அங்குள்ள கண்மாய் பகுதியில் உல்லாசமாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப்பார்த்த சரவணமருது சம்பவத்தன்று திருவாதவூருக்கு வந்துள்ளார். அங்குள்ள கண்மாய்க்கு சென்றபோது அங்கு சக்திவேல் இருந்தார். அவர் தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு சரவணமருது மறுத்ததாக தெரிகிறது.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், ராஜபிரபு, முருகன் ஆகிய 3 பேரும் சரவண மருதுவை கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை கண்மாயின் மறைவான இடத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேல், ராஜபிரபு, முருகன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சரவண மருதுவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை 3 பேரும் அடையாளம் காட்டினர். அதன்பேரில் உடல் தோண்டியெடுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மனைவியின் கள்ளக்காதலனை கொன்று புதைத்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News