திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2-வது நாளாக விடிய விடிய பலத்த மழை
- பலத்த காற்று மழை காரணமாக பழவேற்காடு கடலில் குறைந்த அளவு படகுகளே மீன் பிடிக்க சென்றுள்ளன.
- தாழ்வான இடங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
திருவள்ளூர்:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
நேற்று இரவும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 2-வது நாளாக நேற்று இரவு முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.
திருவள்ளுரில் நேற்று காலை முதலே தொடர்ந்து மழை நீடித்து வந்த நிலையில் இரவிலும் நீடித்தது. அவ்வப்போது இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
திருத்தணி, தாமரப்பாக்கம், திருவாலங்காடு, ஆவடி, பூண்டி, பூந்தமல்லி செங்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 63 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில மற்ற இடங்களில் பெய்த மழை அளவ(மி.மீட்டரில்) வருமாறு:-
கும்மிடிப்பூண்டி-12
பள்ளிப்பட்டு-18
ஆர்.கே.பேட்டை-30
சோழவரம்-32
பொன்னேரி-17
செங்குன்றம்-35
ஜமீன்கொரட்டூர்-28
திருவாலங்காடு-53
பூந்தமல்லி-62
பூண்டி-28
தாமரைப்பாக்கம்-38
திருவள்ளூர்-54
ஊத்துக்கோட்டை-22
ஆவடி-53
பொன்னேரி அடுத்த உப்பளம், பழவேற்காடு மீஞ்சூர் அடுத்த அரியன் வாயல் நந்தியம்பாக்கம் கல்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. இதையடுத்து மின்தடை ஏற்பட்டது.
தடப்பெரும்பாக்கத்தில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் தெரு நாய் ஒன்று பலியானது. பலத்த காற்று மழை காரணமாக பழவேற்காடு கடலில் குறைந்த அளவு படகுகளே மீன் பிடிக்க சென்றுள்ளன. பொன்னேரி 9-வது வார்டு, பர்மா நகர், ரெயில் நிலையம் அருகில் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி உள்ளது. ஆணையர் கோபிநாத் தலைமையில் தூய்மை பணியாளர்கள் இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விட்டு விட்டு கன மழை கொட்டியது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்றத்தூரில் 82 மி.மீட்டர் மழை பதிவானது. காஞ்சிபுரத்தில் 42.7மி.மீட்டர், உத்திரமேரூர்-40.8 மி.மீட்டர், வாலாஜாபாத்-48.4, ஸ்ரீபெரும்புதூர்-78.4, செம்பரம்பாக்கம்-64.2.மி.மீட்டர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், மாமல்லபுரம், கேளம்பாக்கம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதியில் 2-வது நாளான நேற்று இரவு முதல் விடிய விடிய கன மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுராந்தகத்தில் 79 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. செங்கல்பட்டில்-55 மி.மீட்டர், செய்யூர்-25.3 மி.மீட்டர், தாம்பரம்-21.5 மி.மீட்டர், மாமல்லபுரம்-27 மி.மீட்டர், கேளம்பாக்கம்-44.2 மி.மீட்டர், திருக்கழுக்குன்றம்-45.4 மி.மீட்டர், திருப்போரூர்-37 மி.மீட்டர் மழை கொட்டித்தீர்த்து உள்ளது.