தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ராமேசுவரத்தில் விடிய விடிய பலத்த மழை

Published On 2023-11-30 10:39 IST   |   Update On 2023-11-30 10:39:00 IST
  • ராமேசுவரம் கோவிலுக்கு வந்த ஐயப்ப பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
  • நகராட்சி ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம்:

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதலே கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இதனால் ராமேசுவரம், மண்டபத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. அதனை கடந்து செல்ல பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பல இடங்கள் தொடர் மழையால் சேறும், சகதியுமாக மாறியது.

ராமேசுவரம் கோவிலுக்கு வந்த ஐயப்ப பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் விடுதி அறைகளிலேயே தங்கினர். இன்று காலை மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் வழிபட்டனர்.

ராமேசுவரத்தில் நகராட்சி அலுவலகம் முன்பு, பொது மார்க்கெட், முனியசாமி கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கனமழை பெய்தாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காத நிலையில் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி குடையுடன் பள்ளிக்கு பெற்றோர்கள் அழைத்து வந்தனர்.

Tags:    

Similar News