கனமழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வருகை குறைந்தது
- தக்காளி 47 லாரிகள், வெங்காயம் 40 லாரிகள் உட்பட 370 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.
- பலத்த மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறிகள் கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
இன்று தக்காளி 47 லாரிகள், வெங்காயம் 40 லாரிகள் உட்பட 370 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன. ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறிகள் கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது.
நள்ளிரவு மந்தமாக தொடங்கிய காய்கறி விற்பனை படிப்படியாக வியாபாரிகளின் வரத்து குறைய தொடங்கியதால் அதிகாலையில் மார்க்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடியது.
இதனால் மூட்டை மூட்டையாக காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேங்கின. இதனால் காய்கறி விலை குறைந்து விற்கப்பட்டது.
கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்ற ஊட்டி கேரட் விலை குறைந்து ரூ.50-க்கும், ரூ.70-க்கு விற்ற பீன்ஸ் ரூ.40-க்கும், ரூ.23-க்கு விற்ற தக்காளி ரூ.19-க்கும் விற்கப்படுகிறது.
தக்காளி, கத்தரிக்காய், புடலங்காய், முள்ளங்கி, நூக்கல், முட்டைகோஸ், சவ்சவ், வெள்ளரிக்காய், காலி பிளவர் உள்ளிட்ட பச்சை காய்கறிகள் ஏராளமான மூட்டைகளில் தேக்கமடைந்து இருப்பதால் மொத்த வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.