ஈரோட்டில் பலத்த மழை- தாளவாடியில் காட்டாற்று வெள்ளத்தில் தரைபாலங்கள் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு
- தாளவாடி, தொட்டகாஞ்சனூர், அருள்வாடி, திகினாரை, ஆசனூர், சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்தது.
- ஓடைகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் மற்றும் குளம், குட்டைகள் நிரம்பியது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. நேற்றும் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அந்தியூர் அடுத்த வரட்டுபள்ளம் பகுதியில் ஒரே நாளில் 10 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக வரட்டுபள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.50 அடியை நெருங்கிவிட்டது.
இதேபோல் பவானி, கொடிவேரி, குண்டேரிப்பள்ளம், பவானிசாகர், ஈரோடு, சத்தியமங்கலம், அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, பெருந்துறை, சென்னிமலை, எலந்தகுட்டைமேடு, நம்பியூர், தாளவாடி, கொடுமுடி போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.
தாளவாடி, தொட்டகாஞ்சனூர், அருள்வாடி, திகினாரை, ஆசனூர், சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. பின்னர் மழை தூரி கொண்டே இருந்தது.
பலத்த மழையால் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது. 10-க்கும் மேட்பட்ட ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த காட்டாற்று வெள்ளத்தால் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூரில் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலை மற்றும் சூசைபுரத்திலிருந்து பீம்ராஜ் நகர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலங்களை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர். சுமார் மூன்று மணி நேரத்துக்கு பிறகு வெள்ளம் வடிந்ததும் வாகனங்கள் சென்றன. இங்குள்ள தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதே போல் ஓடைகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் மற்றும் குளம், குட்டைகள் நிரம்பியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையால் அள்ள புரத்தொட்டி கிராமத்தில் 6 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இதேபோல் பவானி சுற்று வட்டார பகுதியில் பெய்த மழை காரணமாக தொட்டிபாளையம் என்ற கிராமத்தில் மழை வெள்ளம் சூழந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் காடையாம்பட்டி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. இதன் காரணமாக பவானி, அந்தியூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வரட்டுபள்ளம்-107.20, பவானி-76, கொடிவேரி-52, குண்டேரிபள்ளம்-48.6, பவானிசாகர்-46.60, ஈரோடு-43, சத்தியமங்கலம்-40, அம்மாபேட்டை-39.60, மொடக்குறிச்சி-35, பெருந்துறை-32, சென்னிமலை-28, எலந்தகுட்டைமேடு-26.60, நம்பியூர்-26, தாளவாடி-24, கவுந்தப்பாடி-21.20, கொடுமுடி-10.20, கோபி செட்டிபாளையம்-7.50.