தமிழ்நாடு

தமிழரசி

துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் பலி- சிறுவனின் விளையாட்டு அத்தையின் உயிரை பறித்தது

Published On 2024-04-23 03:53 GMT   |   Update On 2024-04-23 03:53 GMT
  • சரத்குமாரின் 4 வயது மகன் அந்த ‘ஏர்கன்’ துப்பாக்கியை அங்கும், இங்கும் தள்ளி விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது
  • தமிழரசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வேங்கிபாளையம் பாப்பான்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி (வயது 30). இவரது அண்ணன் சரத்குமாரின் 4 வயது மகன் வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். அங்கு இச்சி மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தை சுற்றி திண்ணை போன்று அமைத்து இருந்தனர். அதில் 'ஏர்கன்' துப்பாக்கியை வைத்து இருந்தனர்.

சரத்குமாரின் 4 வயது மகன் அந்த 'ஏர்கன்' துப்பாக்கியை அங்கும், இங்கும் தள்ளி விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென 'ஏர்கன்' துப்பாக்கியில் இருந்து குண்டு மின்னல் வேகத்தில் வெளியேறியது.

அப்போது அந்த வழியாக வந்த தமிழரசின் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் தமிழரசி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

தமிழரசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தமிழரசியை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு தமிழரசிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் தமிழரசி பரிதாபமாக இறந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

அதன் விவரம் வருமாறு:-

தமிழரசிக்கும், ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கட்டியாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முருகனுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தமிழரசி தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

தமிழரசியின் அண்ணன் சரத்குமாரும் (34), பெரியப்பா மகன் சதீஷ்குமாரும் (38) சேர்ந்து கோழி வளர்த்து வந்துள்ளனர். கோழி குஞ்சுகளை தூக்கி செல்ல கழுகு வருமாம். அந்த கழுகை விரட்டுவதற்காக 'ஏர்கன்' துப்பாக்கி வாங்கி வைத்துள்ளனர். அந்த துப்பாக்கியில் குண்டை போட்டு கழுகை சுடுவதற்காக தயாராக வைத்துள்ளனர்.

இதனை சரத்குமாரின் 4 வயது மகன் எடுத்து விளையாடி உள்ளான். அப்போது சிறுவனின் கை பட்டு ஏர்கன்னில் இருந்து குண்டு வெளியேறி தமிழரசி மீது பாய்ந்து அவர் பலியானது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

தமிழரசி பலியானது தொடர்பாக அவருடைய அண்ணன் சரத்குமார், பெரியப்பா மகன் சதீஷ்குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

Similar News