பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
- தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- சிறப்பாக பொங்கலிட்ட 3 குழுவினருக்கு வாழைத்தார் பரிசாக வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
சென்னையை சேர்ந்த 'கிளாசிக் ரன்' என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் ஆண்டுதோறும் வெளிநாட்டினர் பங்கேற்கும் 'ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச்' என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறது. அதன்படி 17-வது ஆண்டாக ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச் பயணமாக, கடந்த மாதம் 28-ந்தேதி சென்னையில் இருந்து இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த 7 பெண்கள் உள்ளிட்ட 26 வெளிநாட்டினர் 9 குழுக்களாக தனித்தனி ஆட்டோக்களில் புறப்பட்டனர்.
வெளிநாட்டினரே ஆட்டோக்களை ஓட்டியவாறு புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் வழியாக நேற்று காலையில் தூத்துக்குடி வந்தனர். பனிமயமாதா ஆலயம், முத்துநகர் கடற்கரையை பார்வையிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பின்னர் தூத்துக்குடி அருகே சாயர்புரம் பிரம்மஜோதி பண்ணை தோட்டத்துக்கு சென்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் 9 குழுக்களாக தனித்தனி புதுப்பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விறகு அடுப்பில் மண்பானையில் பொங்கல் பொங்கி வழிந்ததும் 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாகமாக குலவையிட்டு கொண்டாடினர். அனைவரும் பொங்கலை பரிமாறி உண்டனர்.
சிறப்பாக பொங்கலிட்ட 3 குழுவினருக்கு வாழைத்தார் பரிசாக வழங்கப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. விழாவையொட்டி தோட்டம் முழுவதும் கரும்பு, மஞ்சள் குலை, வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. வெளிநாட்டினர் தமிழ் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகை கொண்டாடியதை சுற்று வட்டார பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்து ரசித்தனர்.
பொங்கலிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி கூறுகையில், ''இந்தியாவில் தமிழர்களின் கலாசாரம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்தாலே தனி மரியாதை கிடைக்கிறது. ஒன்றுகூடி பொங்கலிட்டது வாழ்வில் மறக்க முடியாத விழாவாக அமைந்தது'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.