தமிழ்நாடு
சத்தியமங்கலம் பவானி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஆர்ப்பரித்து சென்ற காட்சி.

நீர்வரத்து 9,400 கன அடியாக அதிகரிப்பு- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Published On 2022-09-11 05:00 GMT   |   Update On 2022-09-11 05:00 GMT
  • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 9,400 கன அடி வந்து கொண்டிருக்கிறது.
  • பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

ஈரோடு:

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டது.

பின்னர் மழைப்பொழிவு இல்லாத போது நீர்வரத்து குறைவதும், மழை பொழிவின்போது நீர்வரத்து அதிகரிப்பதும் என மாறி மாறி வந்து கொண்டிருந்தது. எனினும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியிலே நீடித்து வந்தது.

இந்நிலையில் மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 4,100 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6,800 கன அடியாக உயர்ந்தது.

மேலும் அதிகரித்து இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 9,400 கன அடி வந்து கொண்டிருக்கிறது. அணைத்தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 9,300 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News