தமிழ்நாடு

மீனவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்

Published On 2024-02-20 09:11 GMT   |   Update On 2024-02-20 09:11 GMT
  • சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
  • மீனவ சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ராமேசுவரம்:

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்திலும் படகுகளில் கறுப்பு கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்களை விடுவிக்க இன்று காலை ஏராளமான மீனவர்களும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். மத்திய-மாநில அரசுகள் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மீனவ சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

மீனவ சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பிடிக்கப்பட்ட படகுகளையும் மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, மீனவர்களின் நடைபயண போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும், திட்டமிட்டபடி கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாகவும் மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News