நாமக்கல்லில் இன்று உழவர் சந்தை: விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டம்
- உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகளும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
- நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நாமக்கல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய காய்கறிகளை அவர்களின் சொந்த வாகனங்களில் கொண்டு வந்து உழவர் சந்தையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதேப்போல் உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகளும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளின் வாகனங்களை வெளியில் நிறுத்தக்கூடாது தங்களுக்கு வியாபாரம் செய்ய சிரமமாக இருப்பதாக கூறி வெளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இருத்தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் உழவர் சந்தை விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சந்தைக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும், வெளியில் உள்ள வியாபாரிகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் டி.எஸ்.பி. ஆனந்தராஜ் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.