தமிழ்நாடு செய்திகள்

வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம்

Published On 2023-08-17 11:04 IST   |   Update On 2023-08-17 11:04:00 IST
  • அணை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு 2003-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
  • பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மூலனூர்:

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் ஓடையின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கட்டுவதற்கு 1997-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. 2000-ம் ஆண்டில் அணை கட்டும் பணி தொடங்கியது.

அணைகட்டுவதற்கு 150 விவசாயிகளிடம் இருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர். அணை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு 2003-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விவசாயிக்கு இழப்பீடு தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டு கோர்ட்டு உத்தர விட்டது. ஆனாலும் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலு வலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களை 'சீல்' வைத்தனர்.ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

உரிய இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு நல்லதங்காள் அணையில் இருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மண் எடுத்துக்கொண்டு கோனாபுரத்தில் உள்ள கிராமத்திற்கு சென்றனர். அங்கு அந்த மண்ணுக்கு பூஜை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரிய இழப்பீடு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது. இன்று விவசாயிகள் கருப்பு கொடியுடன் வாயில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News