தமிழ்நாடு

பர்கூர் வனப்பகுதியில் வனத்துறைக்கு தெரியாமல் மின்வேலியில் சிக்கி பலியான யானையை புதைத்த விவசாயி

Published On 2023-03-31 06:03 GMT   |   Update On 2023-03-31 06:03 GMT
  • பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு பகுதியில் ஒரு யானையை விவசாயி ஒருவர் மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • யானையின் உடல் சிதைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் வனப்பகுதி மற்றும் அந்தியூர் வன சரகத்துக்குட்பட்ட பர்கூர் வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

இந்த நிலையில் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே தற்போது 103 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு வருகிறது. இதையொட்டி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வரும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இப்படி வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதையொட்டி யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களில் புகாமல் இருக்க ஒரு சில பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனுமதியின்றி விவசாய நிலங்களையொட்டி மின் வேலிகள் அமைத்துள்ளனர். அந்த மின்வேலிகளில் சிக்கி யானைகள் பலியாகும் சம்பவங்களும் நடக்கிறது.

ஈரோடு வனக்கோட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு கோவில் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சடையப்பன் (வயது 58). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த விவசாய தோட்டத்தில் யானைகள் வராமல் இருக்க அனுமதியின்றி மின்வேலி அமைத்து இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழியாக வந்த ஒரு யானை மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பலியானது. இதையடுத்து அவர் இறந்த யானையை வனத்துறையினருக்கு தெரியாமல் அந்த பகுதியிலேயே குழிதோண்டி புதைத்து விட்டார்.

இந்த நிலையில் பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு பகுதியில் ஒரு யானையை விவசாயி ஒருவர் மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பர்கூர் வன சரக அலுவலர் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியில் அவர் மின்சாரம் தாக்கி பலியான யானையை புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து பணியாளர்கள் மூலம் வனத்துறையினர் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டினர். அப்போது அங்கு யானையின் உடல் சிதைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து யானையின் உடல் பாகங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.

இதையடுத்து வனத்துறையினர் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்று புதைத்தாக கூறி சடையப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி மாவட்ட கிளையில் அடைத்தனர்.

Tags:    

Similar News