தமிழ்நாடு

தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்- "குவாரிகளில் மணல் விற்பனை தகவல்களை தாருங்கள்"

Published On 2023-09-21 06:01 GMT   |   Update On 2023-09-21 06:01 GMT
  • மணல் குவாரிகளில் சி.சி.டி.வி. கேமிரா பதிவு காட்சிகள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
  • அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் மணல் விற்பனை விவகாரத்தில் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சென்னை:

மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் 34 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளிலும் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் மணல் குவாரி நடத்த ஒப்பந்தம் பெற்றுள்ள தொழில் அதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினார்கள். ஆடிட்டர் சண்முகராஜ் என்பவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப் பட்டது.

மணல் குவாரிகளில் சி.சி.டி.வி. கேமிரா பதிவு காட்சிகள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மணல் குவாரிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மணல் அளவு மற்றும் விற்பனை செய்யப்பட்ட அளவு ஆகியவற்றை பற்றியும் கணக்கிட்டனர்.

குவாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் மணலில் போலி பதிவுகள் மூலம் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையை அமலாக்கத் துறையினர் மேற்கொண்டு இருந்தனர். போலி பதிவு மூலம் மணல் விற்பனை நடப்பதை சில ஆவணங்கள் மூலம் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்ததாக தெரிகிறது.

குவாரி மணல் விற்பனையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இதன் மூலம் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சில ஆவணங்கள் பிணாமி பெயரில் இருப்பதையும் உறுதி செய்தனர்.

இதையடுத்து மணல் விற்பனை தொடர்பாக மேலும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்காக அமலாக்கத்துறை சார்பில் தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடந்து வரும் ஆற்று மணல் விற்பனை மற்றும் மணல் சேமிப்பு ஒப்பந்த விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையால் மணல் விற்பனை விவகாரத்தில் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News